இன்றைய தியானம்(Tamil) 22-01-2021
இன்றைய தியானம்(Tamil) 22-01-2021
மனமிருந்தால் இடமுண்டு
“பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள். அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.” – ரோமர் 12:13
ஒரு கிராமத்தில் இரண்டு ஏழைகள் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் வசித்து வந்தனர். ஒரு நாள் இரவில் ஒரு முதியவர் கிழிந்த உடையுடன் கதவைத் தட்டி பசிக்கிறது, சிறிது உணவும், ஒண்டிப்படுக்க சிறிது இடமும் கேட்டார். ஒருவன் தன்னிடம் இடமில்லை என்று சொல்லி அனுப்பிவிட்டான். அடுத்த வீட்டில் உள்ள ஏழை மனிதன் அவருக்கு தனது சிறிய வீட்டில் படுக்க கொஞ்ச இடமும் சிறிது உணவும் கொடுத்தான். அடுத்தநாள் காலை ஓய்வெடுத்த மகிழ்வுடன் எழுந்து, வீட்டுக்காரனிடம் ஒரு பழைய பையைக் கொடுத்துச் சென்றார். அதில் இரண்டு தங்க நாணயங்கள் இருந்தன. அதை விற்று சிறிய வியாபாரம் செய்து பெருக்கி நிறைவான வாழ்வை மனமகிழ்வுடன் வாழ்ந்தான்.
வேதத்தில் நாம் பார்ப்போம் என்றால், ஆபிரகாம் உபசரிக்க கூடிய நபராக இருந்தார் என்று ஆதி. 18:2, 4ல் சொல்லப்பட்டிருக்கிறது. அவரை நோக்கி வந்த அந்த மூன்று புருஷருக்கு முன்பாக எதிர்கொண்டு ஓடி தரை மட்டும் குனிந்து உங்கள் கால்களை கழுவ தண்ணீர் கொண்டு வருகிறேன் மரத்தடியில் சாய்ந்து கொண்டிருங்கள். உங்கள் இருதயம் திடப்பட கொஞ்சம் அப்பம் கொண்டு வருகிறேன். அதன் பின் போகலாம் என கூறி 3 படி மாவில் அப்பம் சமைத்து இளம் கன்றை அடித்து அவர்களுக்கு விருந்து பண்ணி கொடுத்தார். அவர்கள் உணவை சாப்பிட்டு, பின் ஆபிரகாமை ஆசீர்வதித்தனர். அவர்களுடைய வாழ்க்கையில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிள்ளைச் செல்வமாகிய ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டார். பிள்ளையில்லாததால் அவர்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் இருந்திருக்கலாம். தேவனோ ஈசாக்கு என்னும் மகிழ்ச்சியை கொடுத்தார்.
இன்றும் பிறருக்கு கைம்மாறு கருதாமல் உதவும் குணம் நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும். இவர்களுக்கு உதவி செய்து எனக்கு என்ன ஆகப்போகிறது. என்னுடைய வீட்டின் தேவைக்காக வாங்கி வைத்துள்ளதை இவர்களுக்காக செலவழிப்பதா என்ற எண்ணம் இருந்தால் நாம் யாருக்கும் உதவமுடியாது. ஆனால் பிறருக்கு உதவி செய்ய வேண்டும், உபசரிக்க வேண்டுமென்ற மனம் இருந்தால் எதையும் பொருட்படுத்தமாட்டோம். அதைக் காணும் ஆண்டவர் நிச்சயம் நம்மை ஆசீர்வதிப்பார். வறுமையின் மத்தியிலும் தீர்க்கனை போஷித்த சாறிபாத் விதவையின் வீட்டில் மாவும், எண்ணெயும் குறையாமல் ஆசீர்வதித்தவர் உங்கள் வாழ்விலும் நிறைவை கட்டளையிடுவார்.
- Bro. ஆல்வின் ஜேக்கப்
ஜெபக்குறிப்பு:
ஒடிஸா பணித்தளத்தில் கும்மா என்ற பகுதியில் புதிதாக ஊழியம் ஆரம்பிக்கப்பட ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250